மூன்று உயிர்களை காக்க நாம் உணர்வு பூர்வமான போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் தமிழக அரசின் காவல் துறையால் மிக கொடுரமாக சுட்டுக்கொல்லப்பட்ட எட்டு அப்பாவிகளின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் அல்லது கண்டுக்கொள்ளாமல் நாம் இருப்பதும், ஓட்டுக்காக அரசியல் நடத்தும் அரசியல் வாதிகள் ஒரு கண்டன அறிக்கையை முதல்வரின் கோபத்திற்கு ஆளாகத வண்ணம் தந்துவிட்டு அமைதியாக இருந்து விடுவதும் எந்த வகையில் நியாயம் என்று நமக்கு புரியவில்லை. அரசின் இது போன்ற கண்முடித்தனமான, கொடுரமான செயல்களால் பாதிக்கப்பட்டவர்களை சாதி ரீதியாகத்தான் தவிர மனிதாபிமானத்துடன் பார்ப்பது கிடையாது. நாம் என்று மனிதாபிமானத்துடன் பார்க்கின்றோமோ அன்றே இது போன்ற வான் செயல்களுக்கு ஒரு முடிவு ஏற்பட்டுவிடும் ஆனால் நாம் ஒருபோதும் அப்படி இருப்பதும் இல்லை பார்ப்பதும் இல்லை.
11-09-2011 அன்று பரமக்குடியில் ஏற்பட்ட கலவரம், காவல்துறையின் துப்பாக்கி சூடு போன்றவையும் நாம் அப்படித்தான் பார்க்கின்றோம். அனால் அதன் அடிப்படை தன்மையை நாம் பார்ப்பதும் கிடையாது புரிந்துக்கொள்ள முயற்சிப்பதும் கிடையாது. அந்த துப்பாக்கி சூடு நடந்ததற்கு அடிப்படை காரணம் மற்றும் முதன்மையாக நாம் கருதுவது தமிழக காவல் துரையின் மெத்தன போக்கும், ஒரு சமுதாய மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நடத்தும் ஒரு குருபூஜையில் அந்த சமுதாய மக்களின் தலைவரை வரக்கூடாது என்று தடை போட்டதும் ஆகும். இதில் நாம் ஒன்றை கூர்ந்து கவனிக்க வேண்டும் திரு ஜான்பாண்டியன் அவர்கள் பலவருட சிறைவாசத்திற்கு பின்பு தற்போது தான் வெளியை வந்துள்ளார். அதனால், தான் இழந்து போன அரசியல் செல்வாக்கை அல்லது மக்களிடம் நெருங்கி உறவாட முடியாத அந்த நாட்களை இந்த குருபூஜை மூலம் செய்து விடலாம் என்றும், இந்த குருபூஜைக்காக பல லெட்சம் ரூபாய் செலவு செய்து வருகின்றார் என்றும் முன்பே உளவுத்துறை அறிக்கை தந்துள்ளதாக தெரிகிறது. அப்படி பொருள் செலவு செய்து ஏற்பாடு செய்யப்பட நிகழ்ச்சியில் அவர் கலந்துக்கொள்ள வரும் போது வரக்கூடாது என்பது உண்மையில் அவர் சார்ந்த அந்த சமூக மக்களுக்கு கோபம் ஏற்படுவது என்பது நியாயமே.
அனால் இதில் காவல் துறை மற்றும் தமிழக அரசு தங்கள் கடைமையை சரியாக செய்யவில்லையா அல்லது இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்ததா என்று புரியவில்லை. நியாயமாக காவல் துறை என்ன செய்து இருக்க வேண்டும். இதே அதிமுக மற்றும் திமுக அரசுகள் தேவர் குருபுஜையியை நடத்தும் போது செய்யும் முன் ஏற்பாடுகளை தியாகி இம்மானுவேல் ராஜசேகரன் குருபுஜையின் போதும் கடைபிடித்திருக்க வேண்டும். அது என்னவென்றால் ஜான்பாண்டியன் வருவதால் எங்கு பதட்டம் ஏற்படுமோ அல்லது எதிர்ப்பு இருக்குமோ அந்த பகுதியெல்லாம் காவல் துறையை கொண்டு பலப்படுத்தி பாதுகாப்பு அளித்து ஜான்பாண்டியன் வந்து செல்லும் வரை பாதுகாப்பு செய்து இருக்க முடியும் அனால் அப்படி செய்யவில்லை. அனால் தேவர் குருபுஜையின் போது இரு அரசுகளும் பிரச்சனைக்குரிய பகுதிகளிலெல்லாம் பாதுகாப்பை பலப்படுத்த செய்து அந்த தேவர் சமூக தலைவர்கள் அனைவரும் வந்து அஞ்சலி செலுத்த வழி செய்கிறதே தவிர எந்த தலைவருக்கும் இதுவரை தடை செய்து வரக்கூடாது என்று சொல்லவில்லை, ஏன் திமுக ஆட்சியில் கூட இன்னல் முதல்வர் ஜெயலலிதா சென்று வர ஏற்பட்ட கலவரத்தில் கூட காவல் துறை தான் அடிப்பட்டதே தவிர பொதுமக்களை போலீஸ் அடிக்கவில்லை.
நிலைமை கட்டுக்கு மீறி சென்றுவிட்டதால் துப்பாக்கி சூடு நடத்தி பொருட்களுக்கு சேதம் வராமல் தடுக்கவேண்டி இருந்தது என்று துப்பாக்கி சூடு நடத்திய திரு செந்தில் வேலன் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பொருட்களுக்கு சேதாரம் வராமல் இருக்க வேண்டும் எனற எண்ணம் இருந்த உங்களுக்கு உயிர்களுக்கு சேதம் வரகூடாது என்ற மனிதாபிமானம் இல்லாமல் போனது ஏனோ ? அல்லது சாகடிக்கப்பட்டவன் ஏழை அப்பாவி கேக்க நாதியில்லாதவான் என்ற கருத்தா? ஏன் என்றால் யார் கேப்பது ஜான்பண்டியனுக்கும், கிருஷ்ணசாமிக்கும் இதில் தானே பிரச்சனையே.
அடையாறு பகுதி சரக டி ஐ ஜி யாக இருந்த செந்தில் வேலணை சட்ட ஒழுங்கையும், உயிர்களையும் பாதுகாக்க தானே அரசு அங்கு சிறப்பு அதிகாரியாக அனுப்பி இருக்க முடியும். ஆனால் அவர் தன கடைமையை சரியாக செய்தாரா. காவல் துறை பயிற்சியில் கலவரம் செய்யும் அல்லது கட்டுப்பாட்டை மீறும் கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்று மிக சிறப்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க நேர்ந்தால் முதலில் கண்ணிர் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும், வஜிரா வாகனம் கொண்டு தண்ணிரை பியிச்சி அடிக்கவேண்டும் அனால் இங்கு நடந்திருக்கும் நிலைமையே வேறு. கண்ணிர் புகை குண்டு, ரப்பர் குண்டு, வஜிரா வாகனம் எதுவும் பயன் படுத்தவில்லை, வஜிரா வாகனம் கலவரக்கரகளால் தீமுட்டப்பட்டது அப்படியானால் வஜிரா வாகனம் கலவரக்கர்களால் தீ மூட்டும் வரை காவல் துறை என்ன செய்தது அவர்கள் மீது தண்ணிரை பயிச்சி அடித்து விரட்டாமல். அல்லது வஜிரா வாகனம் இயக்கும் அளவுக்கு தகுதி இல்லாமல் இருந்ததா என்று ஆயிரமாயிர கேள்விகள் எழுகிறது. இதையெல்ல மீறி அந்த கூட்டத்தை கலைக்க அல்லது கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தி தான் ஆகவேண்டும் என்று முடிவு செய்து விட்டால் துப்பாக்கி பிரோயகத்தை மனிதனின் முழங்காலுக்கும் கிழே குறிவைக்காமல் மார்பு மற்றும் தலையில் குறி வைத்து சுட காரணம் என்ன? செத்தவர்கள் அனைவரும் தலையிலும் மரபிலும் சுடப்பட்டு இறந்து இருக்கிறார்கள். இங்கு நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் இதை விட மிக கொடுரமாக தொடர்ந்து பத்து நாட்கள் லண்டன் மாநகரமே பற்றி எரிந்தது அனால் ஒரு இடத்தில் கூட கலவரக்கரர்களை காவல் துறை சுடவும் இல்லை யாரும் சாகவும் இல்லை, அங்கு மனித உயிர்களுக்கு மதிப்பு இருந்தது அனால் இங்கு சாதி மனிதர்களுக்கு (ஓட்டு வங்கி வைத்து ) மதிப்பு கொடுக்கப்படுகிறது. தமிழ் நாடு மட்டுமல்ல இந்தியாவில் நடக்கும் எந்த துப்பாக்கி சூடும் ஏழை மக்களுக்கு எதிராகவே இருக்கும் என்பது தான் இன்றைய வரை உள்ள வரலாறு இதில் பரமக்குடி மட்டும் விதிவிலக்கா என்ன?.
அதை விட கொடுமை சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உறுப்பினர்கள் பேசும் போது இது இனக்கலவரம் இல்லை என்று கூறினார்கள் இருந்தாலும் நீதி விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் முதல்வர் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டிருந்தால் பரவாயில்லை அனால் முதல்வரின் கூற்று வேறு மாதிரியாக இருந்தது. அவரின் அறிக்கை இது தான்.
இங்கே பேசியவர்கள் சிலர் இது இனக் கலவரம் இல்லை என்றனர். இனக் கலவரம் இல்லை என்றால், எங்களுக்கும் அதில் மகிழ்ச்சி தான்.
நடந்த உண்மை என்னவென்றால், அந்த கிராமத்தில் ஒரு சுவரில் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி இழிவான சில வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து தான் இந்த மாணவர் பழனிகுமாரின் கொலை நடந்திருக்கிறது; ஜான்பாண்டியன் அங்கே படையெடுத்து புறப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து தான் இந்த கலவரங்கள் எல்லாம் நடைபெற்று இருக்கின்றன. இது தான் ஒரு பொருப்பான முதல்வரின் விளக்கமாக இருக்கின்றன. சுவற்றில் தேவரைப்பற்றி தரக்குறைவான வாசகம் எழுதியிருந்ததினால் ஒரு அப்பாவி 15 வயதே ஆன சிறுவனை கொலை செய்யும் அளவுக்கு மனிதாபிமானம், இல்லாத மிருகத்தன மனம் கொண்ட மக்களாக இருப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. மேலும் கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல ஜான்பாண்டியன் வந்தால் பதட்டம் ஏற்படும் அந்த பதட்டத்தை தனிக்கவே தடை விதிக்கப்பட்டதாக, கைது செய்யப்பட்டதாக ஒரு பொருப்பற்ற பதிலையும் மன்றத்தில் தந்து இருக்கின்றார்கள். சுவற்றில் எழுதப்பட்ட வாசகம் தான் இந்த கொலையை செய்ய காரணமாக இருந்தது என்று ஒரு முதல்வரே சொல்லுவது என்பது அர்த்தம் அற்றதாகிவிடுகிறது. சரி இதை ஒட்டித்தான் அந்த சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கின்றான் என்றாள் அவன் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல அந்த சமுதாயத் தலைவர் என்ற முறையில் ஜான்பாண்டியன் அவர்களுக்கு பொருப்பு இருக்கின்றது. ஆனால் அரசு இதை கையாண்ட விதம் நமக்கு திருப்தியில்லை, புரியவில்லை பாதுகாப்பு, பாதுகாப்பு என்ற ஒரே நொண்டி சாக்கை சொல்லி 8 பேரின் உயிரை தமிழக அரசின் காவல் துறை எடுத்து இருக்கின்றது என்பது கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே சாதித் தலைவர்களால், சிலைகளால், ஊர் பெயர்களால் தமிழகம் சின்னப்பின்னமாகி தமிழிண உணர்வு இழந்துக் கொண்டிருக்கும் தருவாயில் இது போன்று சாதி தலைவர்களுக்கு அந்த மக்களே குருபூசை ஏற்பாடு செய்வது அல்லது அரசே குருபூசை ஏற்பாடு செய்து சட்ட ஒழுங்கை சீர்குலைப்பது மட்டுமல்லாமல் முதல்வரே அதில் கலந்துக்கொள்வது என்பது ஆரோக்கியமான சனநாயகத்திற்கு நல்லதல்ல. தமிழகத்தில் உள்ள எல்லச் சாதியிலும் நல்ல தலைவர்கள், தியாகிகள் இருந்து இருக்கின்றார்கள் அவர்களுக்கெல்லாம் குருபூசை என்று அந்த சமூக மக்களோ அல்லது அரசோ நடத்த ஆரம்பித்தால் தினமும் ஒரு குருபூசை அதனால் ஏற்படும் சட்ட ஒழுங்கு, மக்கள் சிந்தும் குருதி என்று தினம் தினம் தமிழகம் போர்களமாகத் தான் காட்சி அளிக்கும் இனிமேலும் அரசு இது போண்ற வரலாறுத் தவறுகளை செய்யாமல் எல்ல குருபூசைகளையும் தடை செய்து விட்டால் தமிழகத்தில் சாதிகலவரத்தால் மனிதன் இறக்க வேண்டி வராது. அரசு செய்யுமா? இதை.
- நிலவன்